திங்கள், 23 ஜூலை, 2007

ஜாதிக்காய்




ஜாதிக்காய்

1. வேறுபெயர்கள்: கிழக்கிந்திய ஜாதிக்காய், மேற்கிந்திய ஜாதிக்காய்

2. தாவரப்பெயர்: Myristica Fragran Ce, Myristicaceae, Myristice Faeglos

3. வளரும் தன்மை: மொலுக்கஸ் தீவில் தோன்றிய ஜாதிக்காய் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் 1000 டன்கள் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இது செம்புறைமண், தோமிலிமண், களிமண் கலந்த தோமிலிமண் பயிர் செய்ய ஏற்றது.

ஜாதிக்காய் ஈரப்பதம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளான தென்மேற்கு மலை ஓரங்களில் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள மண் உகந்தது. மண்ணின் அங்ககப் பொருட்கள் அதிகமாக இருந்தல் மிகவும் அவசியம். இது அடர்த்தியாக வளரக்கூடிய பசுமைமாறா மரம். இவை சுமார் 10-20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய பளபளப்பான இலைகளையுடையவை. இவற்றின் பூக்கள் இளமஞ்சள் நிறத்தில் மிகச் சிறியதாகக் காணப்படும். ஜாதிக்காயில் ஆண் மரம், பெண்மரம் என தனித்தனியாகக் காணப்படும். இதை 6 வருடங்கழித்து அவை பூக்கும் போதுதான் காண முடியும்.

விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதை முளைக்க 6 வாரம் ஆகும். பின் ஆறு மாத கன்றுகளைத் தொட்டிகளுக்கு மாற்றி, ஒரு வருடம் முடிந்தவுடன் நடவுக்குப் பயன்படுத்தலாம். விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜாதிக்காய் மரங்கள் 7-8 வருடங்களில் மகசூலுக்கு வருகின்றன 10-12 வருட மரங்கள் ஒரு மரத்திலிருந்து 2000-3000 காய்கள் கிடைக்கும். ஓட்டுக் கன்றுகள் நட்டபின் 4வது வருடத்திலிருந்து மகசூலுக்கு வருகின்றன.

4. பயன்படும் உறுப்புகள்: ஜாதிக்காயின் விதையைச் சுற்றி இருக்கும் சிகப்பு நிறமான பூ போன்ற பகுதிக்கு ஜாதிப்பத்திரி என்று பெயர். இரண்டையும் தன்னடக்கியுள்ள சதைப்பற்றான பகுதிக்கு ஜாதிக்காய் ஆப்பிள் என்று பெயர். மேல் ஓடு வெடிக்கும், அதுவும் பயன்படும்.

5. பயன்கள்: ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் “மேசின்” என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஜாதி எண்ணெயில் அடங்கியுள்ள “மிரிஸ்டிசின்” என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் “ஒலியோரேசின்” கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம் மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.

“சதை தரும் பத்திரிக்குத் தாபச் சுரம்
ஓதுகின்ற பித்தம் உயருங்காண் – தாகுவிருத்தி
யுண்டாங் கிரகணியோ டோதக்கழிச்சலும்
பண் டாங் குறையே பகர்”

அகத்தியர் குணவாகட பாடல் குறிப்பிடுவது போல் ஜாதிப் பத்திரியானது தாப சுரம், பேதி, நீர்க் கழிச்சல், வாதம், தலைவலி, இருமல், வயிற்றுவலி, மாந்தம் போன்றவற்றைக் குணமாக்கும் தன்மையுடையது.

ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும், இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம், ஓக்காளம் ஆகியவற்றைப் போக்கும். சிறு அளவில் உண்டுவரச் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும்.

எண்ணையில் இட்டு காய்ச்சி இவ்வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும். 10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிக்காய்ச் சாறு ஒரு மேஜைக் கரண்டியளவு கலந்து சாப்பிட்டால் அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும். ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் ரசம் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும்.

ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும்.

ஆகவே ஜாதிக்காய் வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி, மூர்ச்சையுண்டாக்கி, மணமூட்டி, உரமாக்கி போன்ற மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன் தைலம் பல்வலி, வாதம், வாயு, கழிச்சல் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது.

குறிப்பு: என்னுடன் நிழற்படத்தில் உள்ளவர் K.P.பழனிசாமி B.Sc.,(Agri) ஆலாந்துறை அருகே உள்ளார். அவரது தோட்டத்தில் உள்ள ஜாதிக்காய் மரம் தான் இது. விவசாய ஆலோசனை அவரிடம் இலவசமாகப் பெறலாம். தொலைபேசி: 0422-2650403

(அடுத்தவாரம் அடுத்த மூலிகை தொடரும்)
__________________________________________________________________________

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல கட்டுரைகள்.

தமிழ் வலைப்பதிவுகளில் மூலிகை பற்றிய இது புதிய வரவு.

வாழ்த்துகள்

kuppusamy சொன்னது…

உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள் இது என் புதுமுயற்சி.

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள நல்ல பதிவு,

மிக்க நன்றி.

பெயரில்லா சொன்னது…

நல்ல விசயங்களாப்போடறீங்க. நிறைய போடுங்க நாங்க பயன்பெற‌

சுந்தரவடிவேல் சொன்னது…

மிகவும் நல்ல முயற்சி ஐயா. தொடரவும்!

//வேறுபெயர்கள்: கிழக்கிந்திய ஜாதிக்காய், மேற்கிந்திய ஜாதிக்காய்//

இதற்கு இன்னொரு பெயர் சாதிக்காய் :)

Thangavel Manickam சொன்னது…

அய்யா, ஜாதிக்காயில் இவ்வளவு மகத்துவமா? ஆச்சரியம்.

kuppusamy சொன்னது…

தங்ங்கவேல் மாணிக்கம் அவர்களுக்கு மிக்க நன்றி.

Inquiring Mind சொன்னது…

“சதை தரும் பத்திரிக்குத் தாபச் சுரம்
ஓதுகின்ற பித்தம் உயருங்காண் – தாகுவிருத்தி
யுண்டாங் கிரகணியோ டோதக்கழிச்சலும்
பண் டாங் குறையே பகர்”


ஐயா... தாதிக்காயை பற்றி மேலே உள்ள சித்தர் பாடலில் உள்ளதாக சொல்றீங்க.. ஆனா, இந்த பதிவு ஆரம்பத்தில, வெள்ளக்காரந்தான் இந்தியாவில் அறிமுக படுத்தினான்ன்னு சொல்றீங்க.. அகத்தியர் அந்த காலத்துல எப்படி எங்க இருந்து ஜாதிக்காய பத்தி தெரிஞ்சிருப்பார்?

kuppusamy சொன்னது…

அய்யா எனது வலைப்பதிவை நன்றாகப் படித்தமைக்கு மிக்க நன்றி. நான் ஆரம்பத்தில் இந்த வலைப்பதிவை எழுதும் போது சித்த மருத்துவர் இருவரைக் கேட்டு எழுதியது. இதைப்பற்றி கேட்ட போது ரோமானியர் காலத்தில் போர்ச்சுகீசியர் மற்றும் டச்சுக்காரர்கள் இந்தியாவில் வந்து வியாபாரம் செய்யும் போது இந்தக்காயையும் இங்கிருந்து வாங்கிச் சென்றுள்ளார்கள் என்றும் ஆதாரம் இருப்பதாகச் சொல்கின்றனர். பதின்னொராம் நூற்றாண்டில் இருந்தே வியாபாரமும் செய்துள்ளதாகச் சான்றுகள் உள்ளன. எனின்னும் சித்தர் கால பெருமையை நான் மறுக்கவில்லை. மிக்க நன்றி.
அன்புள்ள
குப்புசாமி.

பெயரில்லா சொன்னது…

அய்யா
கே.பி.பழனிசாமி அய்யாவின் செல்
எண் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
அன்பன் சீனி
ssetex@gmail.com