திங்கள், 21 ஜூலை, 2008

பூவரசு.


பூவரசு.


1) மூலிகையின் பெயர் -: பூவரசு.

2) தாவரப்பெயர் -: THESPESIA POPULNEA.

3) தாவரக்குடும்பம் -: LVACEAE.

4) வகைகள் -: கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும்.

5) பயன் தரும் பாகங்கள் -: இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன.

6) வளரியல்பு -: புவிக்கரசனாகிய பூவரசன் காய கல்ப மரமாகும்.வேம்பு போல நூற்றாண்டு கால மரம். மருந்துக்கு மிகவும் ஏற்றது. தென்னிந்தியாவில் அதிகமாக் காணப்படுகிறது.இதன் இலை பசுமை நிறமாகவும், அரச இலையைவிட சற்று அகலமாகவும் இருக்கும். இதன் பூமொட்டுசிறிய பம்பரம் போல் இருக்கும்.மொட்டு மலர்ந்தவுடன் புனல் வடிவில் மஞ்சள் நிறமுடையதாக மலரும். கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். காய்களை உடைத்தால் விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. பூவரசு புழுக்களைக் கொன்று நம் உடலைத் தூய்மையாக்கி உடலை உரமாக்கும் தன்மை உடையது. விதை குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் உண்டாகும்.

7) மருத்துவப் பயன்கள் -: பூவரசங்காய்களை உடைத்தால் மஞ்சள் நிறமான ஒரு திரவம் கசியும். இதனை எடுத்து அடிபட்ட காயங்கள், விஷக்கடிகள், சரும நோய்களான படர்தாமரை, செதில்படை, சிரங்கு இவைகளுக்குத் தடவி வர இளிதில் குணம் கிடைக்கும்.

உடம்பில் என்ன பூச்சி கடித்ததென்று தெரியாத காணாக்கடிகளுக்கு பூவரசு மரப்பட்டை 210 கிராம் எடுத்து இடித்து ஒரு சட்டியிலிட்டு, 1400 மி.லி. நீர் விட்டுக் காய்ச்சி மூன்றில் ஒன்றாக வற்றியபின் வடிகட்டி, தினமும் இரண்டு வேளை அருந்தி வந்தால் காணாக் கடி விஷம், பாண்டு, சோகை, பெருவயிறு முதலிய நோய்கள் குணமாகும்.

பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பறங்கிப் பட்டை சேர்த்து நன்கு இடித்து சூரண்ம் செய்து கொள்ள வேண்டும். இதனைஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் காலை,மாலை இரண்டு வேளை உண்டு வந்தால் நாட்பட்ட தொழு நோய்க்கு நன்மை பயக்கும். இதை உட்கொள்ளும் போது உணவில் உப்பை நீக்க வேண்டும்.

பூவரசங்காயிலிருந்து முறைப்படி எடுக்கப்படும் எண்ணெய் பெருவயிறு, வயிற்றுப்புண் இவைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

பூவரசம் பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை தேவையான அளவு உள்ளுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய் குணமாகும்.

நூறு வருடமான பூவரச மரத்தின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.

வெண்குஷ்ட நோயால் உதட்டில் ஏற்பட்ட வெண்புள்ளிகளைப் போக்க பூவரசின் முதிர்ந்த பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றினை வாயிலிட்டு அடிக்கடி கொப்பளிக்க வேண்டும். இது போல் பல தினங்கள் கொப்பளித்து வரவேண்டும். அந்தச் சாற்றை விழுங்கி விட்டால் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.

இதன் பழுப்பு இலையை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போட சொறிசிரங்கு, கரப்பான்,ஊரல், அரிப்பு குணப்படும்.

இலைகளை அரைத்து வதக்கிக் கட்ட வீக்கம் குறையும்.

100 ஆண்டுகள் சென்ற மரத்தின் காய், பூ, பட்டை ஆகியவற்றைச் சமனளவு பொடித்துக் காலை, மாலை 1 தேக்கரண்டி நீண்ட நாள் சாப்பிட்டுவரத் தோல் வியாதிகள் அனைத்தும் தீரும்.

பூவரசன் பட்டைத்தூள் 100 கிராம், சீமைக்காசிக்கட்டி 100 கிராம், இந்துப்பு 100 கிராம், சேர்த்து அரைத்து வைக்கவும்.குழந்தை வேண்டாம் என்பவர்கள் கருத்தடைக்காக இதனைச் சாப்பிடலாம். விலக்கான நாள் முதல் ஏழு நாள் 10 கிராம் அளவு வெந்நீரில் குடிக்கவும். ஏழு நாளும் பால், மோர், மிளகு ரசம், பருப்புத் துவையல் மட்டும் சாப்பிடவும். நல்லெண்ணெயில் தலை முழுகவும். இதனால் கருப்பை சுருங்கிவிடும்.. ஒரு வருடம் வரை கரு தரிக்காது நல்ல கருத்தடை முறை இது.

பூவரசம் வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி 50 மி.லி.யுடன் 10 மி.லி. ஆமணக்கெண்ணெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க பேதியாகும். பேதி நிற்க மோர் குடிக்கவும். இதனால் சொறி, சிறங்கு, படை நோய்கள் குணமாகும்.

‘ நூறாண்டு சென்றதொரு நுண் பூவரசம் வேர்
நூறாண்டு குட்டைத் தொலைக்குங்காண்-வீறிப்
பழுத்த இலை, விதை, பூ, பட்டை இவை கண்டால்
புழுத்த புண் விரேசனமும் போம்.’

‘குட்டும், கடி, சூலை கொல்லும், விடபாகம்
துட்ட மகோதரமும், சோபையொடு-கிட்டிமெய்யில்
தாவு கரப்பான் கிரந்திதன் மேகம் போக்கிடும்
பூவரசன் காய் பட்டை பூ.’
------------------------------------------ கும்பமுனி.

‘பெற்றோர்தந்த ரோகங்கள் பிழையால் பெற்ற பாழ் நோய்கள்
பற்றியதொழுநோய் புண்புரைகள் படர்தாமரை கரப்பான்
முற்றும்பற்றாதோடி வடும் பூவரசென்னும் மூலிகையால்
சற்றே பிள்ளை பேற்றுக்கும் தாழ்பாளாகும் பூவரசே.’

----------------------------------------(மூலிகை தொடரும்)

கருத்துகள் இல்லை: