திங்கள், 7 ஜூலை, 2008

நெல்லி.


நெல்லி.
1) மூலிகையின் பெயர் -: நெல்லி.
2) தாவரப்பெயர் -: EMBILICA OFFICINALLIS.
3) தாவரக் குடும்பம் -: EUPHORBIACEAE.
4) வகைகள் -: பி.எஸ்.ஆர் 1, காஞ்சன் என் ஏ 7கிருஷ்ணா சக்கையா, மற்றும் கருநெல்லி, அருநெல்லிஎன்ற இரு இனம் உண்டு.
5) வேறு பெயர்கள் -: அம்லா, ஆமலகம், கோரங்கம்,மிருதுபாலா.
6) பயன்தரும் பாகங்கள் -: இலை, பட்டை.வேர்,காய்,பழம்,காய்ந்த பழம், பூ, மற்றும் வேர்பட்டை,விதை முதலியன.
7) வளரியல்பு -: இந்தியாவில் எங்கும் காணக்கிடைக்கும். 800 மீட்டர் உயரம் வரை மலைகளில் நன்றாக விளையும். மற்ற நிலங்களில் சுமாராகவிளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக்கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும், அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக்காயகளையும் உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றுள்ளது.இலையடி செதில் மிகச்சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும் பெண்பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும் கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும்.பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின்எண்ணிக்கையைவிடக் குறைவு. பூ விதழ்கள் ஆறு.தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது.வெடியாக்கனி பல வீனப் பட்டதாக இருக்கும். உருண்டைவடிவமானது. சதைப்பற்றுள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்றுகோணங்கள் உடையது. விதையுறைக் கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய் விடும், மற்றவை 6 வருடங்கள் கூட ஆகும்.இது விதைமூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கும் செய்யப் படுகிறது.
8)மருத்துவப்பயன்கள் -: நெல்லியன் செய்கை, இலை, பட்டை, காய்த பழம் துவர்ப்பியாகச் செயல்படும்பூ குளிர்ச்சியுண்டாக்கி மலத்தை இளக்கும். பழமும் சிறு நீரைப் பெருக்கி, மலக்காரியாகவும், சீதள காரியாகவும் செயல்படும்.
நெல்லி காயகற்ப மூலிகையில் முக்கியமானது. இதன் பொருட்டே அன்று அதியமான் ஔவைக்கு கொடுத்து சரித்திரத்தில் சான்றாக நிற்கின்றார் இதன்சிறப்பை பின் வரும் சத்துக் களில் விவரம் தெளிவுறுத்துகிறது.
மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4 கி. கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி. இரும்புச்சத்து - 1 மி.கி. வைட்டமின் பி1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி. நியாசின் - 0,4 மி.கி. கலோரிகள் - 60
வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் 'சி ' அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும்.
இதன் இலைக்கொழுந்து ஒரு கைப்பிடி அளவிற்று எடுத்து, அரைத்து மோரில் கலந்து சீதக் கழிச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
நெல்லிக்காய்ச் சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரை லிட்டர், செவ்விளநீர் 2 லிட்டர், நல்லெண்ணெய்ஒன்றரை லிட்டர் கலந்து அதிமதுரம், ஏலம், கோஸ்டம், பூலாங்கழங்கு, கஸ்தூரி மஞ்சள், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, திருகடுகு, தான்றிக் காய், கடுக்காய், வகைக்கு 15 கிராம்தூள் செய்து கலந்து பதமுறக் காய்ச்சி வடிகட்டி (நெல்லித்தைலம்) வாரம் 2 முறை தலை முழுகி வர கண்காசம், காமாலை, மாலைக்கண், பொடுகு, முடி உதிர்தல் தீரும்.
2 கிலோ வற்றலை 4 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி இறுத்து அரைக் கிலோ சர்கரை சேர்த்துப் பாகாக்கி அதில்திரிகடுகு வகைக்கு 30 கிராம், கிராம்பு, ஏலம், வெள்ளைக் குங்கிலியம்,கற்பூரம், வாயய் விளங்கம், அதிமதுரம், கூகைநீறு, கொத்த மல்லி, சீரகம், ஓமம் வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டுக் கிளறி அரைலிட்டர் நெய் சேர்த்துக் காலை, மாலை கழற்சிக்காய் அளவு சுவைத்து பால் அருந்த மேகசூடு, எலும்பைப் பற்றிய காய்ச்சல்என்புருக்கி, இருமல், ஈழை, காசம், கபம்,வாயு, பீ னிசம், பொருமல் அனைத்தும் தீரும்.
நெல்லி இலையை நீரில் இட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்ப் புண் தீரும்.
வேர்ப் பட்டையைத் தேனில் உரைத்துத் தடவ நாக்குப் புண் குணமாகும்.
நெல்லி வற்றலும் பச்சைப்பயறும் வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி.யாகக்காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக காலை,மாலை சாப்பிட்டு வர தலைசுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கோதிப்பு தீரும்.
15 கிராம் நெல்லிக் காயை இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி 20 மி.லி.தேன் கலந்து 40 மி.லி.யாக 3 வேளை4 நாள் சாப்பிட மிகு பித்தம் தணியும்.
''சுத்தசுரம் தோலாப் பெரும் வாந்திபித்தசந்தி பாதமிசை பேருங்காண்-மெத்தமணம்நாறு மயர்க்கூந்துன்பின்னே காவும் இனிமை யெனக்கூறுமரு நெல்லியின் வேர்க்கு''
அரு நெல்லிச் சாற்றால் வெள்ளை படுதல் குணமாகும். வாந்தி நிற்கக் கொடுக்கலாம்.இதன் வடகத்தை துவையலாக வழங்க உடல் குளிர்ச்சி உண்டாகும். கண் ஒளிபெறும், காமாலை நீங்கும், பித்தம் போகும். மலமிழகும்.
---------------------------(மூலிகை தொடரும்)

கருத்துகள் இல்லை: