புதன், 27 ஆகஸ்ட், 2008

நந்தியாவட்டை.


நந்தியாவட்டை.

1) மூலிகையின் பெயர் -: நந்தியாவட்டை.

2) தாவரப் பெயர் -: ERVATAMIA CORONRIA.

3) தாவரக்குடும்பம் -: APOCYANACEAE.

4) வேறு பெயர்கள் -: Pinwheel flower, Moon beam, East Indian roseby, & crepe jasmine.

5) பயன் தரும் பாகங்கள் -: பூ மற்றும் வேர்.

6) வளரியல்பு -: நந்தியாவட்டை ஒரு செடியினம்.இதன் இலைகள் எதிரடுக்கில் அமைந்துள்ள கரும்பச்சை நிறமாகும். இதன் பூக்கள் வெந்நிறமாக இருக்கும். மலர் பல அடுக்கு இதழ்களையுடைய இனமும் காணப்படுகின்றன. பூசைக்கு உரிய மலர்களானதால் திருக்கோயில் நந்தவனங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப் படுகின்றன. வளமான எல்லா இடங்களிலும் வளர்க்கூடியது. இதன் பிறப்பிடம் வட இந்தியா. இதை மேற்கு ஆப்பிரிக்காவில் அழகுப் பூஞ்செடியாக வளர்க்கிறார்கள். இது 3 - 5 அடி உயரங்கூட வளரும். இது முக்கியமாக கண் நோயிக்கான மருந்தாகப் பயன் படும். இனப் பெருக்கம் விதைகள் மூலமும் கட்டிங் மூலமும் செய்யப்படுகின்றது.

7) மருத்துவப்பயன்கள் -: நந்தியாவட்ட வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன் படுகின்றது.இதை நிறதிற்கும் பயன் படுகிறது. இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள்.

நந்தியாவட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயை மூழ்க ஊற்றி 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டி வரப் பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

‘காசம் படலங் கரும்பாவைத் தோஷமெனப்
பேசுவிழி நோய்கடமைப் பேர்ப்பதன்றி-யோசைதரு
தந்திபோ லேதெறிந்துச் சாறு மண்டை நோயகற்று
நந்தியா வட்டப் பூ நன்று.’

நந்தியாவட்டப் பூ வானது நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றைக் கெடுக்கும்.

இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும் இதன் வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும். இதன் பூவும் தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளி விட்டுக் கொண்டு வர சில தினத்தில் கண்களில் காணும் பூ எடுபடும். சண்பகப்பூ 60, கார் எள்ளுப்பூ 100, நந்தியாவட்டப் பூ 100 இவற்றைச் சுத்தமாக தூசி மண் முதலியவை இல்லாமல் இதழ்களைச் சுத்தமான கல்வத்தில் போட்டு அதனுடன் துளசி வேர், சங்குப் பொடி, மண்டைஓட்டுப் பொடி வகைக்குக் கழஞ்சி 1, மயில் துத்தமை கழஞ்சி 2, கூட்டிப் புளியம் பூச் சாற்றில் எலுமிச்சம் பழச்சாற்றிலுமாக அடைத்துப் பல்பக் குச்சை போல் திரட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு தாய்பாலில்உரைத்துக் கண்களுக்குத் தீட்டி வரக் கண்வலி, பூவீழ்தல், சதைவாங்கி முதலியன போம்.

நந்தியாவட்டப்பூ காம்பு நீக்கியது பலம் 2, சிறு களாப்பூ பலம் 2, இவை இரண்டையும் ஒரு சுத்தமான வெள்ளைப் புட்டியில் போட்டு இந்தப் பூக்கள் மூழ்க நன்றாகக் கழுவிச் சுத்தி செய்த எள்ளைச் செக்கிலாட்டியெடுத்து நல்லெண்ணை 3 சேர் விட்டுப் புதிய சடை கார்க்கால் அழுத்தமாக அடைத்து உள்ளே சலம் செல்லாமல் மெழுகினால் சீலை செய்து மண் தரையான பசுவின் தொழுவத்தில் ஓரடி ஆழத்தில் 40 நாள் புதைத்து வைத்து எடுத்து ரவி முகத்தில் 21 நாள்கள் வைத்த பின்னர் வடிகட்டி வைத்துக் கொள்க. இந்த தைலத்தைக் கண்களுக்கு 1 - 2 துளி வீதம் தினம் இரண்டு வேளை காலை, மாலை, விட்டுக் கொண்டு வர கண்களில் உண்டாகும் பூ, சதை வளர்ச்சி, பலவித கண்படலம் ரோகங்களுக்கு இன்றியமையாததாகும்.

-------------------------------------------(மூலிகை தொடரும்)

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2008

தொட்டால் சிணுங்கி.

தொட்டால் சிணுங்கி.

1) மூலிகையின் பெயர் -: தொட்டால் சிணுங்கி.

2) தாவரப்பெயர் -: MIMOSA PUDICA.


3) தாவரக்குடும்பம் -: FABACEAE.

4) வேறு பெயர்கள் -: நமஸ்காரி மற்றும் காமவர்த்தினி. (Touch-me-not)

5) பயன் தரும் பாகங்கள் -: இலைகள் மற்றும் வேர்கள்.

6) வளரியல்பு -: தொட்டால் சிணுங்கி தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் ஈரப்பதமான இடங்களில் தானே வளரக் கூடியது. இது தரையில் படர்ந்து 5 அடி வரை படரும் அதே சமயம் இது 60 செ.மீ. உயரமும் இருக்கும். சிறு செடி வகையைச் சார்ந்தது. ஆற்று ஓரங்களில் அதிகமாகக் காணப்படும். சிறு முட்கள் இருக்கும். இலைகள் ஜோடியாக எதிர் அடுக்கில் கூட்டாக இருக்கும். ஒவ்வொரு கிளைக்கும் சுமார் 10-25 எதிர் அடுக்கு இலைகள் உள் நோக்கி இருக்கும். இலைகள் இடையில் ஊதா நிறப் பூக்கள் மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இருக்கும் பூவில் குச்சிகள் ஒரு செ.மீ. நீளத்தில் சிலிர்த்துள்ளது போல் இருக்கும். காய்கள் 2.5 மி.மி. நீளத்தில் இருக்கும். பூக்கள் காற்று மூலமும் பூச்சிகள் மூலமும் மகரந்தச் சேர்க்கை ஏற்படும். இதன் இலைகள் மாலைக்கு மேல் உட்பக்கமாக மூடிக்கொள்ளும். சூரிய உதையத்தின் போது மறுபடியும் தெளிந்து கொள்ளும். மனிதர்கள் தொட்டாலும், அதிர்வு ஏற்பட்டாலும் தொடர்ச்சியாக இலைகள் மூடிக்கொள்ளும். இதனை ஆங்கிலத்தில் ‘Touch-me-not’ என்றும் சொல்வார்கள். மூடிய இலைகள் பகலில் அரை மணி நேரம் கடந்து விரிந்து கொள்ளும். இதன் பூர்வீகம் வட அமரிக்கா மற்றும் மத்திய அமரிக்கா. பின் இது தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள், ஆஸ்திரேலியா, நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் பரவியது. இது விதை மூலம் இனப் பெருக்கும் செய்யப்படுகிறது.

7) மருத்துவப்பயன்கள்-: ‘நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தெய்வீக மூலிகையுமாம். தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை மிகுவிக்கும். அதனால் ‘காமவர்த்தினி’ என்றும் கூறுவர். மாந்திரீகத் தன்மை உடையது.

“பகரவே இன்னமொரு மூலிகேளு
பாங்கான சிணுங்கியப்பா காப்புக்கட்டிநிகரவே
பூசையிடு மந்திரத்தால் நினைவாக
உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே.”

என்பது ஒரு பழம் பாடல், இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய்யப் பயன்படுத்துவர்.

இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும்.

இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். சிற்றின்பம் பெருகும். 10-20 நாள் சாப்பிட வேண்டும்.

சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.

வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது, தொடுதலும் கூடாது.

‘மேகநீரைத்தடுக்க மேதினியிற் பெண்வசிய
மாகவுன்னி னல்கு மதுவுமன்றி-தேகமிடைக்
கட்டாகக் காட்டுகின்ற சாலை துரத்திலிடுந்
தொட்டாற் சுருக்கியது சொல்.’

குணம்- தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் என்க.

உபயோகிக்கும் முறை -: ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரைப பஞ்சுபோல் தட்டி ஒரு மட் குடுவையில் போட்டு கால் படி சலம் விட்டு அடுப்பிலேற்றி வீசம் படியாகசுண்ட, வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற சலம் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, சல்லடைப்பு தீரும். இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு விராகனெடை பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்ளின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு  செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மட் கடத்தில்போட்டுச் சலம் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குண்டிக் காய்வலி நீங்கும்.

பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு நோய் தீரவேண்டுமானால் தொட்டால் சுருங்கி இலையைப் பறித்து சுத்தம் செய்து, அவ்விலையோடு தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து பசு மோரில் கலந்து பெண்கள் அருந்த நோய் குணமாகும்.

குழிப்புண் குணமாக  இவ்விலையைப் பறித்து வந்து  சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்பண்ணீல் விடுவதோடு கொஞ்சம் இலையையும்  அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான  துணியால் கட்டி வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.

மேனியில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் நீண்ட நாள் இருந்து தொல்லை கொடுக்கும் வேளையில் இவ்விலையைப் பறித்து வந்து , அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ  விரைவில் குணமாகும்.








-------------------------------------------(மூலிகை தொடரும்)
மருத்துவர் பாஸ்கர்செயராமன் அவர்கள் முகநூலில் 12-10-2016    அன்று மேலும் பல தகவல் கூறியது......

  
தோல்வியாதிகளுக்கு தொட்டாற்சுருங்கி
1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி.
‘நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும். அதனால் ‘காமவர்த்தினி' என்றும் கூறுவர்.
இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும்.
தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.
ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.
சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.
இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குணமாகும்.
புண்கள் குறைய
தொட்டாற்சுருங்கி இலையை உரலில் இடித்துச் சாறு எடுத்து, குழிபுண்ணில் இட்டு அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து துணியால் கட்டுப்போட்டு வர குழிப்புண் போன்ற புண்கள் குறையும்.
வயிற்று கடுப்பு குறைய
தொட்டாற் சிணுங்கி இலையை எடுத்து வெண்ணெய் போல் அரைத்து அதனுடன் தயிர் கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்.
இடுப்புவலி குறைய
தொட்டால் சிணுங்கி இலையை தண்ணீர் விட்டு வேக வைத்து அந்த தண்ணீரை இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி குறையும்.
சர்க்கரை நோய் குறைய
தொட்டாற் சுருங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.
உடல் குளிர்ச்சியாக
தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும்.
சிறுநீர் எரிச்சல் குறைய
தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து 10 கிராம் எடுத்து, காலையில் தயிருடன் கலந்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் குறையும்.
வாத வீக்கம் குறைய
தொட்டால் சிணுங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் குறையும்
தேமல் குறைய
தொட்டாற்சுருங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும்.
வயிற்றுக்கடுப்பு
ஒரு கையளவு தொட்டாசிணுங்கி இலையை நன்றாக அரைத்து ஒரு குவளை தயிறுடன் கலந்து காலை உணவிற்கு முன் பருகவும்.
மூலச்சூடு குறைய
தொட்டால் சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு குறையும்.
மூல நோய் குறைய
தொட்டாற் சுருங்கி இலை, நொச்சி இலை, எட்டி மர விதை, படிகாரம், வேப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றை களிம்பு பதத்தில் அரைத்து மூலம் உள்ள பகுதியில் பூசி வந்தால் மூல முளை குறையும்.
http://siddhaandherbal.blogspot.in/20…/…/blog-post_8633.html
=========================================================================                                                       

frompradeep 36 pradeep.ame09@gmail.com
tokuppu6@gmail.com
dateWed, Nov 30, 2011 at 11:14 PM
subjectsir, thota sinungi can be used for removing pimples by heating it with coconut oil and it can be used for also curing wounds in head.
       மிக்க நன்றி பிரதீப்.1-12-2011.













புதன், 13 ஆகஸ்ட், 2008

புங்கமரம்.







புங்கமரம்.

1) மூலிகையின் பெயர் -: புங்கமரம்.

2) தாவரப்பெயர் -: PONGAMIA PINNATA.

3) தாவரக்குடும்பம் -: PAPILIONACEAE.

4) வேறுபெயர்கள் -: கரஞ்சம், கரஞ்சகம், புங்கு (புன்கு)


5) பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, விதைகள், வேர் மற்றும் எண்ணெய்.

6) வளரியல்பு -: புங்கமரம் இந்தியாவில் சாதாரணமாக எங்கும் காணக் கூடிய மரம். இது பெரிய மர வகுப்பைச் சேர்ந்தது. சுமார் 18 மீ. உயரம் வரை வளரும். சமவெளிகளிலும் 3000 அடி உயரமான இடங்கள் வரையிலும் வளரும். சிறகமைப்புக் கூட்டிலைகளையும், முட்டை வடிவச் சிற்றிலைகளையும், காய்கள் பச்சையாக தட்டையாக இருக்கும். நன்றாக முற்றியவுடன் லேசான மஞ்சள் நிறமுடைய காய்களின் முனை வளைந்து காணப்படும். இதன் பூக்கள் இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்த நெற்பொறி போன்று கொத்துக் கொத்தாக இருக்கும். இது கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளர்கிறது. கிராமங்களில் வீட்டின் முன்பு வேம்பு அல்லது புங்கன்மரம் இருப்பதை பார்க்கலாம். இவைகள் வெளியிலிருந்து வரக்கூடிய கிருமிகளையும், தூசிகளையும் வடிகட்டி நமக்கு சுத்தமான காற்றை அனுப்புகின்றன. சாலையோரங்களில் நிழலுக்காக வளர்க்கப்படுகிறது. இனப்பெருக்கம் செய்ய நன்றாக முற்றிய காய்ந்த விதைகளின் கடினமான மேலோட்டை நீக்க ஊரவைத்தும் அதன் பருப்பை விதைத்தும், கட்டிங் மூலமும் நாற்றை உற்பத்தி செய்வார்கள்.


7) மருத்துவப்பயன்கள்-: புங்கன் அழுகலகற்றி (ANTI-SEPTIC) செய்கையுடன் கிருமிகளை அகற்றி உடலைத் தேற்றும் குணம் உடையது.

புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும் குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்க குணம் தெரியும்.

புங்கன் இலையைக் குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த கணத்திற்குக் கொடுக்கலாம்.

புங்கன் இலையை ஆரைத்து ரத்த மூலத்திற்குப் பற்றிடலாம்.

புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும்.

புங்கன் பூவை தேவையான அளவுஎடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடிசெய்து 500 மி.கி. முதல் 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும் புளிப்பு, வாயு பதார்த்தங்களை இச்சமயம் நீக்க வேண்டும்.

நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம்.

புங்கம் விதையிலிருந்து குழித்தைல முறைப்படி எடுக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவு உள்ளுக்கும், மேலும் பூசி வர மேகம், பாண்டு முதலிய நோய்கள் குணமாகும். நரை,திரை,மூப்பு நீங்கி இளமையோடு நீண்ட காலம் வாழலாம்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும். இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும்.

புங்கிலிருந்து கிடைக்கும் பாலை புண்களுக்குப் போட்டு வந்தால் விரைவில் அவை ஆறும்.

புங்கன் வேர்ப் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல், ஈளை முதலியவை குணமாகும்.

புங்கன் வேரை காடியில் அரைத்து விதை வீக்கத்திற்கு பற்றிட்டு வர வீக்கம் குறையும்.

புங்கன் புளி,மா,வேம்பு, கறிவேம்பு ஆகியவற்றின் இலை வகைக்கு 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு வகைக்கு 3 கிராம் 1 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 2 முடக்கு வீதம் குடித்து வர மாந்தம், உள் சூடு, பித்த சுரம் ஆகியவை போகும். குழந்தைகளுக்கு 30 மி.லி. வீதம் தினம் 1 வேளைகொடுக்கலாம்.

பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கொள்ள மது மேகம் மதுமேக ரணங்கள் தீரும். புகை, போகம், புளி, மீன் கருவாடு நீக்கவும்.

புங்கம் பூ, புளியம் பூ, பூண்டு, சீரகம், நன்னாரி வேர், வெப்பாலை அரிசி, வசம்பு, வகைக்கு 50 கிராம் இடித்து 1 லிட்டர் பசும்பாலில் அரைத்துக் கலக்கி 1 லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடிகட்டி அரை முதல் 1 தேக்கரண்டி வரை காலை மட்டும் 1 மண்டலம் கொள்ள சகலக் கரப்பானும், தோல் நோயும் தீரும்.

புங்க வேர், சிற்றாமணுக்கு வேர், சங்கன் வேர் வகைக்கு 40 கிராம் பூண்டுச்சாறு அரை லிட்டர், விளக்கெண்ணெய் 2 லிட்டர் கடுகு ரோகினி 10 கிராம் வாதரசு(வாதமடக்கி) வேர்ப் பட்டை 20 கிராம் இடித்துப் போட்டு 15 நாள் வெயில் புடம் வைத்துக் காலை மட்டும் 1 தேக்கரண்டி கொடுத்து வர எவ்வித சரும ரோகமும், கரப்பான், சொறி, சிரங்கு, புண், புரைகளும் தீரும்.

தற்பொழுது புங்கன் எண்ணெயிலிருந்து பயோடீசல் தயார் செய்து வாகனம் மற்றும் ஆயில் இஞ்ஜின்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆயிலைப் பிறிக்கும் போது கிளசரின் மற்றும் மெத்தனால் கிடைக்கின்றது. இந்த ஆயில் சோப்பு செய்யப் பயன்படுத்தப் படுகிறது. அதன் புண்ணாக்கு பயிர்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்துகிறார்கள். 12-08-2008 அன்று ஐ.எப்.ஜி.டி.பி மூலம் நானும் சத்தி பன்னாரியம்மன் சக்கரை ஆலை வழாகத்தில் அமைந்துள்ள புங்கன் விதையிலுருந்து பயோடீசல் எடுக்கும் தொழிற்சாலையைப் பார்வையிட்டேன். புகைப்படம் இணைப்பு.

-------------------------------------------(மூலிகை தொடரும்)