வியாழன், 30 டிசம்பர், 2010

கஞ்சாங்கோரை.


1.      மூலிகையின் பெயர் :- கஞ்சாங்கோரை.

2.      தாவரப்பெயர் :- OCIMUM CANUM.

3. தாவரக் குடும்பம் :- LAMIACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :-  இலை, விதை மற்றும் பூ.

5. வேறு பெயர்கள் :-  நாய் துளசி, சங்கரத்துளசி மற்றும் பேய் துளசி என்பன.

6. வளரியல்பு :-  கஞ்சாங்கோரை ஒரு சிறு செடியினம். எல்லா வகை பண்ணிலும் வளர்வது. எதிரடுக்கில் அமைந்த நல்ல மணமுடைய இலைகளையும், கதிர்வடிவப் பூங்கொத்தினை யுடையது. மழை காலங்களில் தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே வளர்கிறது. இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

7. மருத்துவப் பயன்கள் :-  இலை கோழையகற்றி இருமல் தணித்தல், உடலில் வியர்வையைப் பெருக்குதல், வெப்பம் மிகுத்து ஆற்றலை அதிகப்படுத்துதல்,  முறை நோய் நீக்கல், விதை தாதுவெப்பு அகற்றல் ஆகிய செய்கைகளை யுடையது.

இலைச்சாற்றில் 30 துளி, சிறிது பாலுடன் குழைந்தைகளுக்குக் கொடுக்க மாந்தக் கழிச்சல், விக்கல், இருமல், சளி ஆகியவை குணமாகும்.

இலையை அரைத்துச் சுண்டைக் காயளவு தயிரில் கலந்து காலை மாலை கொடுக்க மூலச்சூடு, கணச்சூடு, மேகநோய் தீரும்.

பத்து கிராம் இலையும், ஒரு கிராம் மிளகும் சேர்த்து அரைத்து வெந்நீரில் கொடுக்கச் சளி வெளியாகி மார்ச்சளி, காசம், இருமல், ஆரம்ப என்புருக்கி ஆகியவை தீரும்.

இலையை விளக்கெண்ணையில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் கட்டி வர மூலத்தில் நெளியும் பூச்சிகள் ஒழிந்து அரிப்பு தினவு ஆகியவை தீரும்.

இலையைஅரைத்துத் தடவிக் குளிக்க சொறி, சிரங்கு தீரும்.

இலைப்பூவுடன் வசம்பு சேர்த்து அரைத்துத் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்க பத்துப் பதினையிந்து நாள்களில் பத்துக்கால் பேன் ஒழியும்.

இலையை உலர்த்திப்பொடித்து 5 கிராம் 100 மி.லி. கொதி நீரில் ஊரவைத்து வடிகட்டிப் பால் சர்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு வர சளி தொடர்பான நோய்கள் அகலும்.

------------------------------------(தொடரும்)

திங்கள், 27 டிசம்பர், 2010

அறுகம்புல்,

  
.                                                        மூலிகையின் பெயர் :- அறுகம்புல்.

2.                      தாவரப்பெயர் :- CYNODON DACTYLON.

3.                      தாவரக்குடும்பம் :- POACEAE.

4.                      பயன் தரும் பாகங்கள் :- சமூலம். (முழுதும்)

5.                      வளரியல்பு :- அறுகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். இது சல்லிவேர் முடுச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது.

6.  மருத்துவப் பயன்கள் :- அறுகங்கட்டை உடல் தாது வெப்பு அகற்றித் தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய்  நீக்கும் உடல் தேற்றியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

கணுநீக்கிய அறுகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும். வெப்பம் தணியும், மாத விலக்குச் சிக்கல் நீங்கும்.

கணுநீக்கிய அறுகம்புல் சமூலம் 30 கரிம் வெண்ணெய் போல் அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதி படும். அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும்.

அறுகம்புல் சமூலம் 30 கிராம், கீழாநெல்லிச் சமூலம் 15 கிராம் இவற்றை மையாய் அரைத்துத் தயிரில் கலக்கிக் காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வறட்சி, சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் நீர்கடுப்பு, சிறுநீருடன் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

அறுகம்புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும்.

வேண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சழ் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்துக் குளித்து வரச சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வேர்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு, வேனல் கட்டி தீரும்.

அறுகம் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம், ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும். ( மருந்து வீறு கடும் மருந்து களை உட்கொள்வதால் பல் சீழ் பிடித்து, வாய் வயிறு வெந்து காணப்படுதல்)

அறுகு சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெய்யிலில் வைத்து 45, 90, 150 நாள்கள் தலையில் தடவி வரக் கண்நோய்கள் தீரும்.

ஒரு கிலோ அறுகம் வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8  லிட்டர் நீரில் இட்டு ஒரு லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணைய் கலந்து அமுக்கிராக் கிழங்கு, பூமிச் சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம்  பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கிச் சிறுதீயில் பதமுறக் காச்சி வடித்து எடுத எண்ணெயை (அறுகுத்தைலம்) கிழமைக்கு ஒரு முறை தலையில் இட்டு அரைமணி கழித்துக் குளித்து வர வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவெப்பு, நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும்.

அறுகம் வேர், நன்னாரி வேர், ஆவரம் வேர்ப்பட்டை, குமரி வேர் வகைக்கு 50 கிராம்  2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக நாளைக்கு 5 வேளை கொடுக்க மது மேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.

---------------------------------------(தொடரும்)

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

மிளகாய்ப் பூண்டு.




 
  1.மூலிகையின் பெயர் -: மிளகாய்ப் பூண்டு.

2.தாவரப் பெயர் -: CROTON SPARSIFLORUS.

3.தாவரக் குடும்பப் பெயர் -: EUPHORBIACEAE.

4.பயன்தரும் பாகங்கள் -: இலை, விதை மற்றும் வேர்   முதலியன.

5.வளரியல்பு -: மிளகாய்ப் பூண்டு தமிழகமெங்கும் தானே வளர்கிறது. எல்லா மண் வளத்திலும் வளரக்கூடியது. மிளகாய் இலை வடிவில் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும், நீள் குச்சியில் இருமருங்கும் வெண்ணிறப் பூக்களையும், ஆமணக்குக் காய் வடிவில் சிறு காய்களையும், உடைய மிகச்சிறு செடி. 2 அடி உயரம் வரை குட்டாக வளரும். இதை எலி ஆமணக்கு என்றும் குறிப்பிடுவதுண்டு.  விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6.மருத்துவப் பயன்கள் -: மிளகாய்ப் பூண்டு மலமிளக்கியகவும் உடல் தாதுக்களை அழுகாது தடுக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இதன் இலையைக் கீரை போல் வதக்கிச் சோற்றில் பிசைந்து    சாப்பிட மலர்ச்சிக்கல் தீரும்.

இதன் இலையைக் குடிநீர் 3, 4 வேளை 1 முடக்கு வீதம்    குடித்து வரக் கட்டிகள் கரையும். கை, கால் இடுக்குகளில் நெறி கட்டிய சுரம் தீரும்.

40 கிராம் வேரை 250 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி தினம் 2 துளி சர்கரையில் காலை, மாலை சாப்பிட்டு வரப் பாரிச வாயு, பக்கச் சூலை, இழுப்பு, இளம்பிள்ளை வாதம், முக வாதம் ஆகியவை தீரும்.




------------------------------------------------(தொடரும்)

சனி, 11 டிசம்பர், 2010

கோரை.

                                                                                                                
      1. மூலிகையின் பெயர் -: கோரை.
  2.    தாவரப் பெயர் -: CYPERUS ROTUNDUS.

3. தாவரக் குடும்பப் பெயர் -: CYPERACEAE.

4.பயன்தரும் பாகங்கள் -: கிழங்கு.

5. வேறு பெயர்கள் -: முத்தக்காசு, எருவை, கோரா, கோரைக்கிழங்கு மற்றும் ஆங்கிலத்தில் Coco-grass,
nut sedge, nut grass, purple nut sedge, red nut 
sedge முதலியன. இதில் சிறு கோரை, பெருங்கோரை 
என இரு வகையுண்டு.

6. வளரியல்பு -: கோரை ஒரு புல் இனத்தைச் சேர்ந்தது.
இதன் தாயகம் ஆப்பிரிக்கா, தென் ஆசியா, தென் மற்றும் மத்திய ஐரோப்பா, பிரான்ஸ், சைனா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான நீண்ட இலைகளையுடையது. முட்டை வடிவ சிறு கிழங்குகளைப் பெற்றிருக்கும். வளர்ந்த பின் உச்சியில் மூன்று பிறிவாக சிறு பூக்கள் கொண்டிருக்கும். இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையது. பெரும் கோரைக்குக் கிழங்குள் கிடையாது வேர் மட்டும். மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலம் மற்றும் பயிர்களுக்கு இடையே களையாகவும் வளர்ந்திருக்கும். பன்றிகள் இதன் கிழங்கை விரும்பித் தின்னும். கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாக இருக்கும். உட்புறம் வெள்ளையாக இருக்கும். இது கசப்புத் தன்மையுடையது. ஆனால் நறுமணமாக இருக்கும். பெருங்கோரையை வயல்களில் வளர்த்திப் பெரிதாக வளர்ந்த பின் அதை பாயாகப் பின்னுவார்கள். கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும்.

4.    மருத்துவப்பயன்கள் -: கோரைக்கிழங்கு சிறுநீர், வியர்வை ஆகியவற்றைப் பெருக்குதல், உடல் பருமனைக் குறைத்து தாது வெப்பு அகற்றி பலமுண்டாக்குதல், இதயம், மூளை, வயித்துக்கு சக்தி, மாதவிடாய் தொல்லை, காச்சல், வாயுத்தொல்லை குணமடையச் செய்தல், கர்பப்பை கோளாறு குணப்படுத்தல், மார்பு வளர்ச்சி மற்றும் தாய் பால் சுத்தம் செய்தல் ஆகியவை செய்யும்.

கிழங்கு சூரணம் 1 கிராம் காலை, மாலை தேனில் கொள்ள புத்திக்கூர்மை, தாதுவிருத்தி, பசித்தீவனம், உடற்பொலிவு உண்டாகும்.

கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்படாகம், பிரமட்டை, சுக்கு வகைக்கு 5 கிராம் சிதைத்து 500 மி.லி. நீரில் போட்டு 125 மி.லி.யாகக் காய்ச்சிக் காலை, மாலை கொடுத்து வரத் தாகத்துடன் கூடிய சுரம் நீங்கும்.

கிழங்கை குடிநீர் செய்து காச்சிய பாலில் சேர்த்து மோராக்கி அதில் உணவு கொள்ளக் குழந்தைகளுக்குக் காணும் பசியின்மை செரியாமை தீரும்.

இஞ்சியும் கோரைக் கிழங்கையும் நன்கு தேன் விட்டு அரைத்து ஒரு சுண்டக்காயளவு கொடுத்தால் சீதபேதி குணமாகும்.

பச்சைக்கிழங்கை அரைத்து மார்பின் மீது பற்றுப்போட்டால் பச்ச உடம்புக்காரிக்குப் பால் சுரக்கும். தேள் கடி, குளவிக் கடி ஆகியவைகளுக்குப் பற்றிட்டால் குணமாகும். இதை உடல் மீது பூசினால் வியர்வை நாற்றம் வராது.

கோரைக் கிழங்கைப் பாலுடன் அரைத்துப் பசையாக்கி தலைக்குப் பூசினால் ஞாபகசக்தி கூடும். வலிப்பு நோய், காச்சல், பைத்தியம் குணமடையும். மேலும் இரத்தக்கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், சிறுநீர் தாரை சுத்தம் ஆகியவை குணமாகின்றது. கர்ப்பப் பையையும், மார்பகங்களையும் நன்கு வளர்ச்சியடையச் செய்கிறது. இதை 1-3 கிராம் பவுடராகவும், 10-70 மில்லிவரை கசாயமாகவும் குடிக்கலாம். குளந்தைகளுக்கும், பச்சை உடம்புக் காரிகளுக்கும் குடிக்கக்கொடுக்கக்கூடாது. சித்த மருத்துவரின் ஆலோசனைப் படி கொடுக்க வேண்டும்.

கோரைக்கிழங்குப் பவுடரை அரை தேக்கரண்டி வீதம் காலையும் இரவும் உணவுக்கு முன் நீர் அல்லது பால் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, வயிற்றுப்போக்கு நீங்கும்.
----------------------------------------------------(தொடரும்)