புதன், 19 மார்ச், 2008

எருக்கன்


எருக்கன்.

1) மூலிகையின் பெயர் -: எருக்கன்.
2) தாவரப்பெயர் -: CALOTROPIS GIGANTEA.
3) தாவரக்குடும்பம் -: ASCLEPIADACEAE.
4) வேறு பெயர்கள் -: அருக்கன்.ஆள்மிரட்டி என்பன.
5) பயன் தரும் பாகங்கள் -: இலை, காம்பு, கிளை, பூ, வேர், பால் போன்றவை.

6) வளரியல்பு - : எருக்கன் செடி வகையைச் சேர்ந்தது. வறண்ட பிரதேசத்திலும் வளரும்.ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும். நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து காய்க்கும். அடியிலை பழுத்து மஞ்சள் நிறமாக மாறி கீழே விழுந்து விடும்.எருக்கன் செடியின் நுனி முதல் அடிவேர் வரை பால் போன்று நீரோட்டமிருக்கும். எருக்கன் செடியின் எந்த பாகத்தை ஒடித்தாலும் பால் போல் வெளிப்படும்.சில துளிகள் வெளிவந்தவுடன் தானே நின்று விடும்.
இதன் இலை சாம்பல் நிறத்தில் இருக்கும். 3 செ.மீ. கனமும் 10 செ.மீ. நீளமும் சுமார் 5 - 6 செ .மீ. அகலமும் முட்டை வடிவத்தில் இருக்கும்.
வெள்ளெருக்கனை மாந்தீரீக சம்பந்தமான காரியங்களுக்கும் பயன்படுத்துகின்றனர் எல்லாமே மருத்துவ குணம் உடையன. வெள்ளெருக்கன் வேர் அதிசயமாக சில வினாயகர் உருவில் இருப்பதுண்டு.வினாயகர்சிலை இந்த வேரில் செய்து வைத்து வழிபட்டால் சிறந்த பலன் உண்டு.

மலர் பூத்துப் பிஞ்சாகி, காயாகி கொத்தாக இருக்கும். சுமார் 7 - 9 செ.மீ. நீளத்துடன் 3 - 4 செ.மீ. கனமுள்ளதாக இருக்கும். நன்கு முற்றிய பின் வெடித்து பஞ்சாக மாறி காற்றில் பறந்து சென்று விழுந்த இடத்தில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தானே வளர்கிறது.

7) மருத்துவப் பயன்கள்.- இதன் பால் தீ போல சுடும். பட்ட இடம் புண்ணாகும். புழுக்களைக் கொல்லும். விஷக்கடிகளை குணமாக்கும். பயிர்களுக்கு எதிர்ப் பாற்றலைத் தரும்.இலை நஞ்சு நீக்கல் வாந்தியுண்டாக்குதல் பித்தம் பெருக்குதல் வீக்கம் கட்டிகளைக் கரைத்து வேதனை குறைதல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை, ஆகியவை கோழையகற்றுதல் பசியுண்டாக்குதல், முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளையுடையது.

பாம்பு - தேள் கடி -: இதன் இலையை அரைத்து 5 கிராம் அளவு பாலில் சாப்பிடவும். அரைத்து கடிவாயில் கட்டவும். விஷம் இறங்கும். எலிக் கடிக்குக் கொடுக்கலாம்.

குதிங்கால் வலி - :பழுத்த இலையை குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து, சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து, ஒத்தடம் கொடுத்துவர குணமடையும்.

மலக்கட்டு - 20 மி.லி. சிற்றாமணக்ககு எண்ணெயில் 3 - 5 துளி எருக்கன் பால் விட்டுக் கொடுக்க மலர்ச்சிக்கல் தீரும்.

வயிற்றுப் பூச்சி -: சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, கொக்கிப் புழு இருந்து கொண்டு வயிற்று வலியை உண்டாக்கும். 5 கிராம் தேனில் 3 துளி இதன் இலைச் சாறு விட்டு மத்தித்துக் கொடுக்க புழுக்கள் வெளியேறும்.

காது நோய் - : எருக்கன் இலைச் சாறு 50 மி.லி.கலந்து வைக்கவும். இதில் வசம்பு, பெருங்காயம், இலவங்கம், பூண்டு வகைக்கு 5 கிராம் அளவு போட்டு காய்ச்சி வடித்து வைக்கவும். இதனைச் சொட்டு மருந்தாகக்காதில் விட காதில் சீழ் வடிதல், குருதி கசிதல், காதில் எழுச்சியினால் வரும் வலி ஆகியன குணமாகும்.

குட்டநோய் -: இதன் இலையும். வேர் பட்டையும் சம அளவில் உலர்த்திய பொடி 2-3 கிராம் ஆளவு பசு எண்ணெயில் கலந்து நாளும் இரு வேளை 48-96 நாள் சாப்பிட குட்ட நோய் குணமாகும், யானைக்கால் வியாதியும் குணமாகும். உப்பில்லாமல பத்தியம் இருத்தல் வேண்டும்.புளி காரம் எதுவும் கூடாது. தயிர் பால் மோரில்தான் சாப்பிடவேண்டும். இப்பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்குத் தடவ குணமடையும்.

காக்கை வலிப்பு -: எருக்கன் இலையில் வெட்டுக்கிளி எச்சமிட்டிருக்கும். அத்துடன் இலையை எடுத்து உலர்த்திய பொடி 30 கிராம், மிளகுத்தூள் 30 கிராம், உந்தாமணி இலைத்தூள் 30 கிராம் சேர்த்து வைக்கவும். இந்த சூரணத்தை மூக்கில் நசியமிட பொடி போடுவது போல் உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.

பல்வலி -: எருக்கன் பூ 100 கிராம் , உப்பு 10 கிராம் சேர்த்து அரைத்து வடைபோல் தட்டி உலர்த்தி புடமிட்டு சாம்பலாக்கி அரைத்தால் சிறந்த பற்பொடி கிடைக்கும். இதில் பல் துலக்கினால் பல்சொத்தை, புழு, பல்லரணை, பல் கூச்சம் யாவும் குணமடையும்.

ஆஸ்த்துமா -: வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம், இலவங்கம், குங்கும்ப்பூ, கோரோசனை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து உலர்த்தி வைக்கவும். காலை,மாலை ஒரு மாத்திரை தேனில் சாப்பிட்டு வந்தால் 48-96 நாளில் ஆஸ்த்துமா, இழப்பு, இரைப்பு, இருமல், காசம், ஜன்னி குணமடையும்.

சிற்றின்பம் -: இதே மாத்திரை இரண்டையும், 5 கிராம் ஜாதிக்காய்த் தூளையும் பாலில் கலந்து தினமும் இரவில் சாப்பிட்டு வர சிற்றின்பம் பெருகும்.

வாதவலி, வீக்கம் - : எருக்கம் பால் வாதக்கடிகளைக் கரைப்பதன்றி வாத நோய், சந்நிபாதம் ஐவகைவலி இவற்றைப் போக்கும்.

ஒரு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெயில் 7 துளி எருக்கம் பாலை விட்டு நன்றாய்க் குலுக்கி நாசிக்குள் 2-3 துளி விட அளவு கடந்த தும்மல் உண்டாகும். சிரசிலுண்டான நீரையெல்லாம் வெளிப்படுத்தும். காக்கை வலிக்குச் சிகிச்சை செய்யும் போது முதலில் இச்சிகிச்சை செய்வதினால் மூளையை அனுசரித்த சீதளத்தை அகற்றும் அந்தத் தும்மலை நிறுத்த வேண்டுமாயின் முகத்தில் சலத்தால் அடித்துக் குளிர்ந்த சலத்தைக் கொண்டு நாசியைச் சுத்தப் படுத்த வேண்டியது.

எருக்கன் பூவால் முறை சுரம் ,போகா நீர் பிநசம் சுவாசகாசம், கழுத்து நரம்பின் இசிவு ஆகியவை நீங்கும்.

எருக்கன் பூவிற்குச் சமனெடை மிளகு சேர்த்து மெழுகு வண்ணம் அரைத்து இரண்டு குன்றிப் பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்திக் கொண்டு தினம் 2 வேளை ஒவ்வொரு மாத்திரை வீதம் கொடுத்துவர முரைசுரம் நீங்கும்.

5 பலம் ஆவின் நெய்யில் 10-12 எருக்கம் பூவைப்போட்டுக் காய்ச்சி வடித்தெடுத்து வேளைக்கு அரை அல்லது ஒரு தோலா வீதம் கொடுக்க சுவாச காசம், நீர்ப்பீநசம் போம்.

-----------------------------(மூலிகை தொடரும்)
்கருப்பன் அவர்கள் வெளியிட்டது.
//
மலக்கட்டு - 20 மி.லி. சிற்றாமணக்ககு எண்ணெயில் 3 - 5 துளி எருக்கன் பால் விட்டுக் கொடுக்க மலர்ச்சிக்கல் தீரும்.

வயிற்றுப் பூச்சி -: சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, கொக்கிப் புழு இருந்து கொண்டு வயிற்று வலியை உண்டாக்கும். 5 கிராம் தேனில் 3 துளி இதன் இலைச் சாறு விட்டு மத்தித்துக் கொடுக்க புழுக்கள் வெளியேறும்.
//நன்றி திரு கருப்பன் அவர்களே.




புதன், 12 மார்ச், 2008

வில்வம்.



வில்வம்.

1) மூலிகையின் பெயர் -: வில்வம்
2) தாவரப்பெயர் -: AEGLE MARMELOS.
3) தாவரக்குடும்பம் -: RUTACEAE.
4) வேறு பெயர்கள் -: கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி,மாலூரம் போன்றவை

5) பயன் தரும் பாகங்கள் -: இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பட்டை, பிசின். முதலியன.

6) தாவர அமைப்பு - வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப் படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. கனி தொடர்வன, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். எல்லாச் சிவன் கோவில்களிலும் இருக்கும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள். கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும். இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும். பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியன ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம். இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். இது ஒரு விருட்சகம். கோவில் தோரும் இதை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன் படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது. ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம். இதை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

7) மருத்துவப் பயன்கள் -: வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.

இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.

பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.

பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.

பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை - கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.

வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.

வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.

வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.

புற்றுநோய்தீர -: நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.

இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் ஸ்நானம் செய்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது உடலுறவு கூடாது.

வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்து தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும் நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும்.

வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போம்.

வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.

வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.

வில்வக் காயை சுடவேண்டும். சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.

ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.

வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும் பாண்டு வியாதி பறந்தோடும்.

வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.

வில்வ வேரை 10 - 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர, தேவையில்லாத விந்து வெளியேற்றத்தைத் தடுத்து, விந்துவைப் பெருக்கும். ஆண்மையை அதிகரிக்கும்.

வில்வ இலைகளைக் கொண்டு வந்து அரைத்து கோலி அளவு காலையில் வெறும் வயிற்றில் நீரில் கலக்கிக் குடித்து விட்டு ஒரு மணி நேரம் சென்ற பின் தலைக்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். நாளடைவில் மாத ருது காலம் தவராமலும் அதுவால் ஏற்படும் வயிற்று வலியும் படிப்படியாகக் குறைந்து குணமாகிவிடும்.
-------------------------------------(மூலிகை தொடரும்)

புதன், 5 மார்ச், 2008

மருதாணி.


மருதாணி.

1) மூலிகையின் பெயர் -: மருதாணி.

2) தாவரப்பெயர் -: LAWSONIA INERMIS.

3) தாவரக்குடும்பம் -: LYTHRACEAE.

4) வேறு பெயர்கள் -: மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி ஆகியவை.

5) தாவர அமைப்பு -: மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 - 4 செ.மீ. நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம். பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில் வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும். உருண்டையான காய்கள் உண்டாகும், இதில் வரண்ட பின் சுமார் 45 விதைகள் இருக்கும்.இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். இது இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் வணிக ரீதியாக வளர்கிறார்கள். விதையிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். இதை வாசனைப் பொருளாகப் பயன் படுத்துகிறார்கள். பாக்கீஸ்தானில் அதிகம் உபயோகிக்கிறார்கள். இதன் பூர்வீகம் வட ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலும் பரவியுள்ளது. இதன் இலைகளை 5 நாட்கள் நிழலில் உலர்த்திப் பயன்படுத்துவார்கள். இதை விதை மூலமும், கட்டிங் மூலமூம் இனப் பெருக்கம் செய்வார்கள்.

6) இதில் உள்ள முக்கிய வேதியப் பொருட்கள் - :இலைகளில் க்ளூக்கோசைடு, லாசோம், சாந்தோம்கள் லாக்ஸ் தேன்கள் I,II, மற்றும் III. இதன் விதைகளில் பீட்டா ஐநோனோன் போன்ற வேதிய்ப் பொரிட்கள் உள்ளன.

7) பயன்படும் பாகங்கள் -: இலை, பூ, காய்,வேர் மற்றும் விதை போன்றவை.

8) மருத்துவப் பயன்கள் -: மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.


மேகநோய் -: பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம் அளவு 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகிய வற்றை அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோய் அதனால் ஏற்படும்கிரந்திப் புண், அரிப்பு ஆகியன குணமாகும். 10 - 20 நாள் சாப்பிட வேண்டும்.

தோல் நோய் -: மேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.
புண்கள் - ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர -: இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.
உறக்கமின்மை -: தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

பேய் பூதம் -: "மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது. வெள்ளளி, திங்கள் வீட்டடில் இதனைப் புகைக்க வேண்டும்.

கரப்பான் புரகண் -: பான் புண் என்பது கரும்படையுடனை நீரொழுகும் புண்ணாகும். இது அரிப்பையும் கொடுக்கும். நீர் வடியும் இடம் பட்ட இடம் படையுடன் புண் உண்டாகும். இதன் வேர்பட்டை 50 கிராம், முற்றிய தேஙுகாய் 100 கிராம், மிருதார்சிங்கி 15 கிராம், அரைத்து ஆமணுக்கு நெய் விட்டு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் சகல கரப்பான் படையும் புண்ணும் குணமாகும்.

கால் ஆணி -: இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

படைகள்- :கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.
-------------------------------------(மூலிகை தொடரும்)